அமைச்சர்கள் அண்ணன் பக்கம் வரப்போகிறார்கள்! நூறு கோடி இருந்திருந்தால் ஜெயித்திருப்பேன்!: தேர்தல் தீர்ப்பு சொல்லும் சங்கதிகள்....
அறிவிச்சதும் தெரியலை, பிரச்சாரம் நடந்ததும் மனசில் பதியலை, வாக்குப்பதிவும் சரியா நினைவில் இல்லை! ஆனால்....வாக்கு எண்ணிக்கை மட்டும் வகையா மனசில் பதிஞ்சு, தினகரனின் விஸ்வரூப வெற்றியை பார்த்து வியந்து கிடக்கிறது தமிழகம்.
மின்னல் போல் பாய்ச்சலாக நடந்து முடிந்திருக்கும் இந்த தேர்தலின் முடிவு குறித்து முக்கிய தலைகள் என்னென்ன சொல்லியிருக்காங்க? அப்படின்னு மின்னலாய் காண்போம்...
நான் பொய்யாகவோ, பந்தாவிற்காகவோன் இதை சொல்லவில்லை. தேர்தலில் 80% வாக்கு பதிவாகியிருந்தால் நான் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருப்பேன்!
- டி.டி.வி. தினகரன்.
தினகரனின் வெற்றியை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அ.தி.மு.க.வின் ஆட்சிக் காலத்தில் மட்டுமே எதிர்கட்சிகளும் இப்படி இடைத்தேர்தலில் இடையூறின்றி ஜெயிப்பார்கள்.
- செல்லூர் ராஜூ.
ஜெயலலிதா மீது மக்கள் இன்னும் அன்பு வைத்திருக்கின்றனர் என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது. ஜெ., மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை தினகரன் நிரூபித்துள்ளார்.
- இல.கணேசன்.
2ஜி விஷயத்தில் ஊழல்தான் நடந்துள்ளது என்கிற மக்களின் எண்ண ஓட்டம் இன்னும் மாறவில்லை. அதனாலேயே தி.மு.க. தோல்வியடைந்துள்ளது. - தம்பிதுரை
நூறு கோடி ரூபாய் செலவழித்தால்தான் வெற்றி பெற முடியும். ஆரம்பத்தில் இருந்தே தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டை மீறித்தான் பல விஷயங்கள் நடந்தது. - கரு.நாகராஜன்.
தி.மு.க. இருக்கும் இடம் தெரியாமல் போவதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஒரு சில அமைச்சர்களை தவிர மற்றவர்கள் அண்ணன் தினகரனிடம் வருவார்கள். - பெங்களூரு புகழேந்தி
இந்த தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதுவும் எங்களின் தோல்விக்கு முக்கிய காரணமாகிவிட்டது. - டி.கே.எஸ்.இளங்கோவன்.
பணநாயகம் வென்றிருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒரு தேர்தலாகவே நாங்கள் பார்க்கவில்லை. - ராமதாஸ்.
அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவுக்கு அடுத்து யார்? என்கிற போட்டியில் தினகரன் வென்றிருக்கிறார். - திருமாவளவன்.
வெற்றி பெற்றுள்ள தினகரன் தமிழகத்துக்காகவோ, தமிழக மக்களுக்காகவோ போராடியவரில்லை. தி.மு.க.வின் நிலைதான் பரிதாபமாக இருக்கிறது. - அன்புமணி ராமதாஸ்.
இங்கே நடந்திருப்பது உண்மையான தேர்தலே அல்ல. பதிவானதும் ஓட்டுக்கள் அல்ல. ஓட்டுக்கள் விற்பனை பிஸ்னஸ் வெற்றிகரமாக நடந்திருக்கிறது. - தமிழிசை.
ஆர்.கே.நகரில் தோற்றது நாங்களில்லை. உண்மையில் அங்கே தோற்றிருப்பது தேர்தல் கமிஷன் தான். - ஸ்டாலின்.