நான் செத்துப் போனால் அதுக்கு எய்ம்ஸ் மருத்துவமனைதான் பொறுப்பு…. மத்திய அரசை அலற விட்ட லாலு….
எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து உடல் நலம் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ராஞ்சி மருத்துவமனையில் லாலு பிரசாத் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் என உயிருக்கு ஒரு ஆபத்து என்றால், உடல்நிலை இன்னும் சரியாகாமல் என்னை டிஸ்சார் செய்த எய்ம்ஸ் மருத்துவமனைதான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவிற்கு கால்நடை தீவன ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஜார்கண்டின் ராஞ்சியில் உள்ள சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
எனவே அவர் முதலில் ராஞ்சி மருத்துவமனையிலும், பின்பு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் 29ம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். அவர் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எய்ம்சில் இருந்து தன்னை டிஸ்சார்ஜ் செய்ததன் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக லாலு குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், எய்ம்சில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு பிரசாத், நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக ராஞ்சி அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் தான் இன்னமும் குணமடையவில்லை என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், எனக்கு இருக்கும் பிரச்சனைகளால் பலமுறை கழிவறையில் மயங்கி விழுந்திருக்கிறேன். இருதயம், சிறுநீரகம் மற்றும் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன். என் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு எய்ம்ஸ் மருத்துவமனைதான் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.