லேடியா, மோடியா ஓல்டு... மோடியா, இந்தத் தாடியா...? ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பிய கமல்..!
லேடியா, மோடியா என ஜெயலலிதா கேட்டார். நான் இப்போது கேட்கிறேன், மோடியா, இந்த தாடியா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பினார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வீரசக்தியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “ஏழ்மையை ஜாக்கிரதையாக அரசியல் கட்சிகள் பாதுகாத்துவருகின்றன. அதனால்தான் இந்த ஏழ்மையின் மீது எனக்கு கோபம் வருகிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் நான் நடித்திருக்கிறேன். அவர்களோடு தொடர்பு வைத்திருக்கிறேன் என்பதற்காக நான் ஊழல் செய்து விடுவேனா? அது வேறு; இது வேறு. இங்கே தமிழில் வசனம் எழுத ஆள் இல்லாததால் வட நாட்டிலிருந்து தேர்தல் வெற்றிக்காக ஒருவரை அழைத்து வந்துள்ளார்கள்.
என்னை ‘பீ டீம்’ என பரப்பியதே திமுகதான். நான் ஒருவருக்கு பீ டீமாக இருப்பேன் என்றால் அது மகாத்மா காந்தி மட்டும்தான். இங்கே திமுக வெற்றி பெற்றால் அவர்களும் மத்திய அரசுக்கு கை கட்டிதான் இருப்பார்கள். லேடியா, மோடியா என ஜெயலலிதா கேட்டார். நான் இப்போது கேட்கிறேன், மோடியா, இந்த தாடியா ? மத்திய அரசை தைரியமாக கேள்வி கேட்க ஆட்கள் வேண்டும். ரெய்டு விட்டால் கமல்ஹாசன் மீது விடுங்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் மீதெல்லாம் விடாதீர்கள்.
ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். இலவசங்கள் உங்கள் ஏழ்மையை போக்காது. நான் மீன் பிடிக்க கற்று தருகிறேன். நேர்மையின் மீட்சிக்காக நாங்கள் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறோம்” என்று கமல்ஹாசன் பேசினார்.