முதலமைச்சர் ஜெயலலிதா, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்கிடையே, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும், எய்ம்ஸ் டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அடிக்கடி அறிக்கை மூலம் தெரிவித்து வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக தினமும் அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையில் தமிழகம் முழுவதும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர், பல்வேறு கோயில்களில் பூஜைகள், பரிகாரங்கள், யாகங்கள் நடத்தி பூஜைகள் செய்து வருகின்றனர். இதில் தேர் இழுப்பது, அலகு குத்துவது, மண் சோறு சாப்பிடுவது என்பது உள்பட பல்வேறு வேண்டுதல்களையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகர் அருகே முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வழிபாட்டில் பெண் ஒருவர் சாமியாடியபடி மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழிபாட்டு நிகழ்ச்சியில், முருகன் காலனியைச் சேர்ந்த பொன்னுத்தாய் என்ற பெண்ணும் கலந்து கொண்டார்.

அப்போது கோவில் வளாகத்தில் திடீரென அவருக்கு அருள் வந்து, சாமி வந்து சாமியாடிய அவர், குலவை போட்டபடி திடீரென மயங்கி விழுந்தார்.

இதை பார்த்ததும், அங்கிருந்த பொதுமக்கள், கோயிலுக்கு வந்த பக்தர்கள், அவரை உடனடியாக மீட்டு அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பொன்னுத்தாயி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சிறிது நாட்களாகவே முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை நினைத்து பொன்னுதாயி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.