அதிமுக முக்கிய நிர்வாகியை பாஜகவுக்கு தூக்கும் எல்.முருகன்... அடுத்த விக்கெட்டும் காலி..!
தேர்தல் தோல்வியால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்த பிறகு, முன்னாள் நகர்மன்ற தலைவருடன் இணைந்து மாவட்ட அரசியலில் தலைகாட்ட தொடங்கியதோடு, தன்னை டி.டி.வி.தினகரனின் ஆதரவாளராகவும் காட்டிக்கொண்டார்.
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு மன்னர் குடும்பத்தை சேர்ந்த கார்த்திக் தொண்டைமானை அழைத்து வர பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிவிட்டார் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் என ஒரே பரபரப்பாக திருச்சி வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுகவில் இருந்தவர் கார்த்திக் தொண்டைமான். மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர். தேர்தல் தோல்வியால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்த பிறகு, முன்னாள் நகர்மன்ற தலைவருடன் இணைந்து மாவட்ட அரசியலில் தலைகாட்ட தொடங்கியதோடு, தன்னை டி.டி.வி.தினகரனின் ஆதரவாளராகவும் காட்டிக்கொண்டார். டி.டி.வி.ஆதரவாளர்களும் அவரிடம் இருந்து விலகி வேறு கட்சிகளுக்கு தாவத் தொடங்கியதால் மாவட்ட அரசியலில் மீண்டும் தலைகாட்டாமல் இருந்த கார்த்திக் தொண்டைமான், திருமணம் உள்ளிட்ட சுபநிகிழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்பதோடு வீட்டிலேயே முடங்கி இருந்தார்.
சமீபத்தில் கட்சியில் மாவட்ட செயலாளர் பதவி கேட்ட போது அவருக்கு பதவி கொடுக்க தலைமை திடீரென்று மறுத்து விட்டதாம். இதனால் கடும் அதிருப்தி அடைந்த கார்த்திக் தொண்டைமான், தேசிய அளவில் பாஜக கட்சிக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்து மன்னர்குடும்பத்தை சேர்ந்தவரிடம் அவருடைய ஆதரவாளர்கள் சிலர், போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் நேரடியாக மறுக்காமல் நான் புதுக்கோட்டையில் தற்போது இல்லை. எதுவாக இருந்தாலும் நான் மாவட்டத்துக்கு வந்த பின்னர் நேரில் பேசிக்கொள்ளலாம்’’ என்கிறாராம். அப்போ புதுக்கோட்டையில் இருந்து ஒரு விக்கெட் பாஜக பக்கம் விழப்போகிறது.