முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப் 22 அன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் குறித்த பல்வேறு வதந்திகள் கிளம்பிய நிலையில் தற்போது முதல்வர் பூரண நலம் பெற்று வருவதாக அப்போலோ மருத்துவனை தெரிவித்தது.

முதல்வருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு , எயிம்ஸ் மருத்துவர்கள் , சிங்கப்பூர் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்றும் லண்டன் டாக்டர் சிகிச்சை அளித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை கட்சி பாகுபாடின்றி அனைத்து அரசியல் கட்சியினர் , தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் வந்து பார்த்து விசாரித்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பூ முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனை உள்ளே சென்ற அவர் வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: முதல்வர் சிகிச்சை பெறும் மருத்துவ அறைக்குள் மருத்துவர்கள் தவிர யாரையும் அனுமதிப்பதில்லை , முதல்வர் உடல்நிலை குறித்து நிதியமைச்சர் ஓபிஎஸ், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவர் உடல்நிலை நன்றாக தேறி வருவதாக தெரிவித்தார்கள்.

முதல்வர் பூரண குணமடைந்து வருகிறார். அவர் பூரண உடல்நலம் பெற்று தீபாவளி பண்டிகையை தொண்டர்களுடன் கொண்டாடுவார் என நம்புகிறேன். முதல்வர் ஜெயலலிதா தைரியமானவர், எங்களுக்கு எல்லாம் அவர் முன்னுதாரண்மாய் விளங்கி வருகிறார், அவர் பூரண உடல் நலம் பெற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
