எல்.முருகன் உடன் திடீர் சந்திப்பு... கணவரை பாஜகவில் இணைக்க திட்டமிடும் பிரபல நடிகை...!
தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் அக்கட்சியின் தலைவர் எல்.முருகனை, பிரபல நடிகையின் கணவர் சந்தித்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஒருபுறம் வேலைகள் நடத்துவந்தாலும், மறுபுறம் பிரபலங்கள் அரசியல் கட்சி இணைவு, கட்சி விட்டு கட்சி மாறுவது போன்றவையும் நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த முதல் நாளில் இருந்தே தீயாய் வேலை செய்து வரும் குஷ்புவின் வேகத்தை பார்த்து வியந்து, திருவல்லிக்கேணி தொகுதி தேர்தல் பொறுப்பாளராக பாஜக தலைமை நியமித்துள்ளது.
இந்நிலையில் நடிகை குஷ்புவின் கணவரும், பிரபல இயக்குநருமான சுந்தர் சி இன்று பாஜக அலுவலகத்தில் அதன் தலைவர் எல்.முருகனை நேரில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின. அப்போது எல்.முருகனிடம் சுந்தர் சி தான் பாஜகவில் இணைய தயாராக உள்ளதாக விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் சுந்தர் சி பாஜகவில் இணைவார் என்றும், மனைவியுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.