குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி கோவையைச் சேர்ந்த பிரவீன் பலி… மேலும் 7 பேர் உயிரிழந்ததாக தகவல்…
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதி காட்டுத் தீயில் சிக்கிய கோவையைச் சேர்ந்த பிரவீன் என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் அவரது உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியின் கொழுக்கு மலைக்கு திருப்பூரில் இருந்தும் சென்னையில் இருந்து 26 பெண்கள், 8 ஆண்கள், 3 குழந்தைகள் உள்பட 37 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர். இவர்கள் இன்று திங்கள்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மலை ஏறி திரும்பும் போது அவர்கள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் தனிதனியாக பிரிந்து சென்றுள்ளனர். அதில் இதுவரை 27 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை மீட்கப்பட்டவர்கள் அனைவரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் நல்ல நிலையில் மீட்கப்பட்ட ஈரோட்டை சேர்ந்த சிறுமி நேகா சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் உள்பட 2 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே காட்டுத்தீயில் சிக்கிய 5 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த பிரவீன் என்பவரின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.