ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்   பங்கேற்ற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி , அந்த இயக்கத்தினரைப் போல நெஞ்சில் கை வைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த பாஜக ஆட்சியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள், ஜிஎஸ்டி, மாட்டிறைச்சித் தடை, நீட், எட்டுவழிச் சாலை போன்ற பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராடிவந்தன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட அவர், தோல்வியைத் தழுவினார்.

தொடர்ந்து பாஜகவுடன் நெருக்கம் காட்டிவந்த கிருஷ்ணசாமி, தற்போது பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் நிகழ்விலும் கலந்துகொண்டிருக்கிறார். நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கான மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது.

அதில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியும், அவரது மகனும் கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான ஷ்யாம் கிருஷ்ணசாமியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அவரை அறிமுகப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி, புதிய தமிழகம் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், தேவேந்திர குல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை குறித்தும் எடுத்துரைத்தார். 

நிகழ்வில் உறுதிமொழியேற்கும் சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் போலவே கிருஷ்ணசாமியும் நெஞ்சில் கைவைத்து உறுதிமொழியேற்றுக் கொண்டார். நிகழ்வுக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை நேரில் சந்தித்துப் பேசினார்.

அவருக்கு அங்கிருந்த நிர்வாகிகள் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தனர். இந்த புகைப்படங்களை கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதனை பகிர்ந்துள்ள பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, “வெல்கம் கிருஷ்ணசாமி. சமூக ஒற்றுமையை வளர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.