நான் தான் ஜெ.,வின் அரசியல் வாரிசு... அத்தை மகன் தினகரனுக்கு எதிராக அரசியல் பிரவேசம்... தனிக்கட்சி தொடங்கும் இளவரசி மகள்!
சசிகலாவின் ஆக்கள் மகன்கள் தினகரன் மற்றும் அவருடைய தம்பி பாஸ்கரனுக்கு போட்டியாக சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி தன்னுடைய அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்குப் பின், அதிமுகவில் சசிகலா குடும்பத்திடம் சிக்கிவிடக் கூடா தென்பதற்காக சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு ஓபிஎஸ் இபிஎஸ் இணைவதற்கு முன்பே தினகரன் கழட்டி விட்டனர்.
மேலும், அவருக்கு ஆதரவாக 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் உடன் வந்தனர். இதையடுத்து, தினகரன் அணியில் இருந்த சில எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு இரட்டை இலை சின்னமும், கட்சியும் தான் முக்கியம் என்று கூறி எடப்பாடி அணிக்கு தாவினர். இதனால், தினகரனுக்கு 18 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவாக இருந்தனர். இவர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் படி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த தகுதி நீக்கம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வந்த தினகரன் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றியும் பெற்றார், இது எடப்பாடி அணியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி இருந்தும் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனது குறித்து பல ஆலோசனைகளை மேற்கொண்டனர். ஆனாலும், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வெற்றி சசியை நிம்மதி அடையசெய்தது.
மேலும், இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து புதிய கட்சி தொடங்குவது குறித்து பேச்சும் அடிபட்டது. இதனால், தினகரனும் அடிக்கடி புதிய கட்சி தொடங்குவது குறித்து சிறையில் உள்ள சசிகலாவிடம் ஆலோசனை நடத்திவிட்டு வருகிறார். ஏற்கனவே, MGR பிறந்த நாளன்று தினகரன் தன்னுடைய கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சசிகலா இதற்கு சம்மதிக்காததால் அதை அப்படியே விட்டுவிட்டார். இது போதாதென்று ஊழலற்ற ஆட்சி அமைப்பேன் என்றும் தலைவா பாஸ்கரன் பாசறையை சேர்ந்தவர்கள் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார்கள் என்று தினகரன் சகோதரர் பாஸ்கரன் அறிவித்துள்ளார். தினகரனுக்கு போட்டியாக அவருடைய தம்பியே அரசியல் செய்ய வருகிறாரா என தினகரனின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இளவரசி மகள் கிருஷ்ணப்ரியாவும் தினகரனுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் வரும் பிப்ரவரி 24ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறாராம்.
கடந்த சில மாதங்களாக, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டதால் தினகரனும், கிருஷ்ணப்ரியாவும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது தினகரனுக்கு எதிரான அரசியல் பிரவேசம் தகவல்கள் அதிமுக வட்டாரத்தை கலகலக்கிறது. குடும்பத்தில் நடைபெறும் இதுபோன்ற அரசியல் சண்டைகளால் சிறையில் உள்ள சசிகலாவும் தன்னுடைய குடும்பத்தினர் ஒற்றுமையாக இல்லையே என கடுப்பில் இருக்கிறாராம்.
தினகரன், பாஸ்கரனுக்கு இணையாக தொண்டர்களை இழுக்கும் வகையில் ஒரு பெயரை தேர்ந்தெடுக்க கிருஷ்ணப்ரியா தன் நெருங்கியவர்களுடன் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது.
தினகரன் மட்டுமே தற்போது இருக்கும் நிலையில், திவாகரன், பாஸ்கரன், கிருஷ்ணப்ரியா ஆகியோரின் அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.