kp munusamy says that madhusudhanan will win in rk nagar
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளை விட, அதிமுகவின் சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இரு தரப்பினரும், தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த மைத்ரேயன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சற்று நேரத்துக்கு முன், நேரில் சந்தித்து புகார் செய்தனர். பின்னர் கே.பி.முனுசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது.

ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதா, 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா போட்டியிடும்போது, பொதுமக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். அதேபோல், தற்போது மதுசூதனனுக்கு மக்களின் வரவேற்பு நன்றாகவே இருக்கிறது.
பிரச்சாரத்தின்போது, மதுசூதனனை சந்திக்கும் செய்தியாளர்கள், ஒரு லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என உறுதியாக கூறினார். அதன்படி அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். காரணம், அவர் இந்த மண்ணில் பிறந்தவர். மண்ணின் மைந்தர்.
எங்கள் அணி வேட்பாளர் மதுசூதனனை வயதானவர், நடக்க முடியாதவர், அவரை நாங்கள் சிரமப்படுத்துகிறோம் என தினகரன் கூறி வருகிறார்.

ஆனால், அவர் வயதானவர் கிடையாது. எம்ஜிஆர் காலத்தில் கண்டெடுத்து, ஜெயலலிதாவின் ஆட்சியில் பக்கபலமாக இருந்தவர். கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர். அவர் இன்றும் வாலிபர்தான். அவரை போல் கட்சிக்காக உழைப்பவர் யாரும் இல்லை. உழைத்தவரும் இல்லை.

டி.டிவி.தினகரன், பணம் பட்டுவாடா செய்து, வெற்றி பெறலாம் என திட்டமிட்டுள்ளார். அது நடக்கவே நடக்காது. அப்படி நடக்கவும் நாங்கள்விட மாட்டோம். இதுதொடர்பாக, ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் புகார் செய்துள்ளோம். தற்போது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
