வாக்களிப்பதற்காக சொந்த ஊர் செல்லும் பயணிகள் ஒரே நேரத்தில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்த பயணிகளை போலீசார் அடித்து விரட்டினர். இதனால் அங்ழு பதற்றம் ஏற்பட்டது. 

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுவதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தங்களது சொந்த ஊரில் வாக்களிக்கும் உரிமை இருப்பதால் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். தேர்தல் நடைபெறுவதால் பள்ளி மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இன்று தேர்தல், நாளை புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் ஏராளமானோர் நேற்று சொந்த ஊர் புறப்பட்டனர்.

அதனால் வெளியூர் செல்லக் கூடியவர்கள் நேற்று மாலை முதல் பயணத்தை தொடர்வார்கள் என்ற அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை முதல் குவிய தொடங்கினர். மேலும் நேற்று இரவு 7 முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சரியான முறையில் பஸ்கள் இயக்கப்படவில்லை என பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொது மக்கள் தர்ணா மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

ஆனால் மக்கள் செல்ல மறுத்ததால் அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் சற்று நேரம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


மேலும் அங்கு இருந்த பொது மக்கள் ஓட்டு போட சொந்த ஊர் செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும், தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முடியவிலலை எனவும், இரவு 7 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படவில்லை என காவல் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

வாக்களிப்பதற்காக சொந்த ஊர் செல்ல பொது மக்களுக்கு போதிய பேருந்து வசதி செய்யாமல் அவர்களை அடித்து விரட்டுவது நியாயமா என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதே போல் சென்னை மேட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் தாம்பரம் ரயில் நிலையம் எள்ளிட்ட இடங்களிலும் கட்டுக்கடங்கால் இருந்ததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.