ரகுவை கொன்றது யார்..? கொந்தளிக்கும் கோவை மக்கள்..! பதில் சொல்லுமா பழனிசாமி அரசு..?
கோவை அவிநாசி சாலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்ட பேனரில் மோதி ரகு என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்த இடத்தில் WHO KILLED RAGU (ரகுவை கொன்றது யார்) என்று எழுதி கோவை மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, அரசு விழாவாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் 3-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. அதற்காக நேற்று முன் தினம்(24-ம் தேதி) கோவையில் பேனர்களும் அலங்கார வளைவுகளும் அமைக்கும் பணி நடைபெற்றது.
கோவை விமான நிலையத்திலிருந்து வ.உ.சி மைதானம் வரை கோவை-அவிநாசி சாலையில் சாலையை மறித்து அலங்கார வளைவுகளும் பேனர்களும் அமைக்கும் பணி நேற்று மாலை நடைபெற்றது. கோவை-அவிநாசி சாலையில், இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது.
இதையடுத்து நேற்று முன் தினம் இரவு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ரகு, சாலையை ஆக்கிரமித்திருந்த அலங்கார வளைவில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ரங்கசாமி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ரகு, அமெரிக்காவில் பணிபுரிந்துவந்துள்ளார். திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த ரகு, சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரின் இறப்பை அடுத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கோவை மாநகராட்சி அதிகாரிகள், அலங்கார வளைவுகளையும் பேனர்களையும் அகற்றினர்.
உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்டோ, பேனரோ வைக்கக்கூடாது என நீதிமன்றம் என்னதான் வலியுறுத்தினாலும், அரசு தரப்பில் சுயவிளம்பரம் செய்வதை தடுத்து நிறுத்தமுடியவில்லை. சாலையையோ நடைபாதைகளையோ ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கக்கூடாது என்ற மக்களின் குரல் இதுவரை அரசின் காதில் விழவில்லை.
அதனால், வாழ வேண்டிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இனியாவது இதுபோன்ற அபத்தமான செயல்களை அரசு தவிர்க்குமா? என்ற பெரும் கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ரகுவின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாத ஜீரணிக்க முடியாத கோவை வாசிகள், ரகு உயிரிழந்த இடத்தில், WHO KILLED RAGU (ரகுவை கொன்றது யார்) என்று எழுதி தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோல் #WHO KILLED RAGU என்ற ஹேஷ்டேக்கிலும் சமூக வலைதளங்களில் பேனருக்கு எதிராக கண்டனங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இதன் பிறகாவது இதுபோன்ற கொடுமைகளுக்கு முடிவு கட்டப்படுகிறதா என்று பார்ப்போம்...