கொடநாடு கொலை வழக்கு : சயானிடம் தொடர்ந்து விசாரணை
கொடநாடு காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் நீலகிரி எஸ்.பி. முரளிரம்பா ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி மர்ம நபர்களால் கொலை செய்யபட்டார். அவருடன் பணிபுரிந்த மற்றொரு காவலாளியும் படுகாயமடைந்தார்.
இதுதொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜும் அவரது கூட்டாளி சயான் என்பவரையும் போலீசார் தேடி வந்தனர்.
அப்போது, திடீரென கனகராஜ் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். அதேபோல், சயான் என்பவரும் அதே நாளில் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்து கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா சயானிடம் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி., தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சயான் தற்போது உடல் நலம் தேறி வருகிறார் எனவும் தெரிவித்தார்.