ரப்பர் ஸ்டாம்ப் போல செயல்பட மாட்டேன் - கிரண்பேடி ஆவேசம்...
புதுச்சேரி அரசு பணிகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிகமாக தலையிட்டு வந்தார். இதனால் அமைச்சரவைக்கும், ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வந்தது.
இதனிடையே புதுச்சேரி சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கர் நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் மீது உரிமை மீறல் பிரச்சனையை கொண்டு வந்தார்.
இதையடுத்து சந்திரசேகரனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டார்.
அதன்படி அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டு புதிய அதிகாரியாக கணேசனை தலைமை செயலாளர் மனோஜ்பரிதா நியமித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை செயலாளர் பிரபித்த உத்தரவை ரத்து செய்வதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிவித்தார்.
இதனால் ஏற்கனவே லேசாக கசிந்து வந்த மோதல் தற்போது வெடிக்க ஆரம்பித்துள்ளது.
இதையடுத்து புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது. நேற்று நடந்த இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க, பா.ம.க, தவிர அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன.
இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் டெல்லி சென்று ஆளுநர் கிரன்பேடிக்கு எதிராக குடியரசு தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் புகார் அளிப்பதாக முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :
அதிகாரிகளுடன் ஆலோசித்து விதிமுறைப்படிதான் நிர்வாகம் செய்கிறேன்.
அரசின் கொள்கை முடிவில் தலையிடவில்லை.
அமைச்சர் ஆளுநர் மோதல் போக்கால் எந்த கோப்புகளும் நிறுத்தி வைக்கப்படவில்லை.
என்னிடம் வரும் கோப்புகளை சரிபார்த்து உடனே அனுப்பி விடுகிறேன்.
அரசு அதிகாரியை மாற்றும் விவகாரத்தில் தலைமை செயலாளர் விதியை மீறி செயல்படுகிறார்.
தலைமை செயலாளர் மனோஜ்பரிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளேன்.
மக்களை திசை திருப்ப முதலமைச்சரும் சபாநாயகரும் முயற்சி மேற்கொள்ள கூடாது.
நல்ல பணி செய்வதும், மாற்றத்தை கொண்டு வர சிந்தனை செய்வதும் சுயநலவாதிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
அதனால்தான் என்னை மாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள்.
நான் ஒருபோதும் ரப்பர் ஸ்டாம்பு போல செயல்பட மாட்டேன்.
மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியை நான் தடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.