கோபாலபுரத்தில் மோடி.. நாராயணசாமியை பாராட்டிய கிரண் பேடி: என்னடா நடக்குது பி.ஜே.பி.யில?!
மோடியும், கிரண் பேடியும் எதிர்கட்சியினர் மீது இன்று அட் எ டைமில் பாசமழையை பொழிய, ஆச்சரியத்தில் மெர்சலாகி கிடக்கிறது தமிழகமும், புதுச்சேரியும்.
தினத்தந்தி நாளிதழின் பவளவிழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கோபாலபுரம் சென்று முன்னாள் முதல்வரும், தி.மு.க.தலைவருமான கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்கிறார்.
திராவிடம் - இந்து தேசியம் எனும் அடிப்படை சித்தாந்தத்தில் துவங்கி பல விஷயங்களில் பா.ஜ.க.வும், தி.மு.க.வும் முரண்பட்டு அரசியல் ரீதியில் மோதிக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்றிவிட கூடாது என தி.மு.க. நெருக்கடி கொடுத்து தடுக்க, தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்துவிட கூடாது என்று பா.ஜ.க. பல வழிகளில் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால் இரண்டு தரப்பு தலைவர்களுக்கும் இடையில் கருத்து மோதல் உச்சம் தொட்டுள்ளது.
முரசொலி பவள விழாவை ஒட்டி நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு கூட பா.ஜ.க.வை சேர்ந்த யாரையும் ஸ்டாலின் அழைக்கவில்லை. அதேபோல் ஸ்டாலின் பல முறை முயன்றும் அவரை சந்திக்க மோடியும் நேரம் ஒதுக்கவில்லை.
இந்த சூழலில் இன்று கருணாநிதியை மோடி அவரது இல்லத்துக்கே சென்று சந்திக்கும் விஷயம் தமிழகத்தில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநிலத்தில் தாங்கள் மாபெரும் சக்தி என்பதை மோடி உணர்ந்துவிட்டதாக தி.மு.க.வினர் இதில் பெருமையடைகின்றனர்.
அதேபோல் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் பா.ஜ.க.வை சேர்ந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசும் மோதிக் கொண்டிருப்பது உலகமறிந்த விஷயம்.
இந்நிலையில் இன்று கிரண் பேடி ‘மழை வெள்ள பணிகளில் அரசின் நடவடிக்கை நிறைவை தருகிறது. தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு எடுத்தது பாராட்டத்தக்க விஷயம்.’ என்று நாராயணசாமி அண்ட்கோவை மனம் திறந்து பாராட்டியுள்ளார். இது புதுவை மக்களை புல்லரிக்க வைத்துள்ளது.
ஆக பி.ஜே.பி. தலைவர்கள் இன்று சொல்லி வைத்தாற்போல் எதிர் முகாம் மீது பொழியும் நட்பு மழை இரு மாநில மக்களையும் மெர்சலாக்கியுள்ளது.