அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்... அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்!!
அதிமுக தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது வெளியே தொண்டர்கள் சிலர் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலோசனைக் கூட்டத்திலும் ஒற்றைத் தலைமை வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் பலர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.
இதுமட்டுமின்றி, அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இத்தகைய போஸ்டர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் கிழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இது அக்கட்சியில் பெரும் மோதல்களை உண்டாக்கியுள்ளது. இதனிடையே ஒற்றை தலைமையை ஏற்படுத்த அதிமுகவில் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், எடப்பாடிக்கு ஆதரவு அதிகம் இருப்பதாகவும் அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.
அதிமுகவில் நேற்று முதல் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.