நீட் தேர்வு எழுத கேரளா வர்றீங்களா ? வாங்க …வாங்க… உங்களுக்கு என்ன வேணும்? எல்லா வசதியும் நாங்க செய்து தர்றோம்!! பினராயி விஜயன் அழைப்பு…
நாளை நீட் தேர்வு எழுத கேரள மாநிலம் எர்ணாகுளம் வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்
மருத்துவப் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வான நீட், நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புகள் நீட் தேர்வு மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன.
இதுதொடர்பான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழக பிரிவு சார்பில் கேரள அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் தங்கும் வசதி செய்துதர மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.