கேரளாவில் தலித் பெண் எம்.எல்.ஏ ஒருவர் போராட்டம் நடத்திய இடத்தை காங்கிரஸ் கட்சியினர்  மாட்டுச் சாணம் கொண்டு சுத்தப்படுத்தி இருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நட்டிக்கா தொகுதி எம்.எல்.ஏ கீதா கோபி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர், மாநில நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூறி சிவில் நிலைய வளாகத்தில் போராட்டம் நடத்தினார். பின் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் பட்டதால் அவர் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கீதா அந்த இடத்திலிருந்து சென்ற பிறகு, அவர் அமர்ந்து போராட்டம் நடத்திய இடத்தில், அங்கு வந்த இளைஞர் காங்கிரசார் மாட்டுச்சாணம் கலந்த நீரைத் தெளித்துள்ளனர். எம்.எல்.ஏ கீதா, தலித் என்பதால் அந்த இடத்தை தூய்மை ஆக்குவதற்காக மாட்டுச்சாணம் தெளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மீது கீதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.மேலும் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் இது குறித்து புகார் அளிக்கப் போவதாகவும் கீதா கோபி தெரிவித்தார். இச்செயலில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏவுக்கு நேர்ந்துள்ள இந்த சாதிய தீண்டாமை, கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.