51 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு…கேரளாவில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது…
கேரள மாநிலம் கோவளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்சை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கோவளம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வின்சென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் , காங்கிரஸ் எம்எல்ஏ வின்சென்ட் தன் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததன் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணிடம் விசாரணை செய்த போலீசார், எம்.எல்.ஏ. வின்சென்ட் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள வின்சென்ட், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன்மீது இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ. வின்சென்ட் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரை தொலைபேசிமூலம் மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் எம்.எல்.ஏ.வின் தொலைபேசி விவரங்களை சோதனை செய்த போலீசார் அவர் கடந்த சில மாதங்களாக அப்பெண்ணுடன் தொலைபேசியில் பேசிவந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
மேலும் சில ஆதாரங்களை சேகரித்த போலீசார், இன்று எம்.எல்.ஏ. வின்செட்டிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் அவரை கைது செய்தனர்.