“பாஜக தன்னை உலகிலேயே மிகப் பெரிய கட்சி என்று கூறி வருகிறது. அவ்வளவு பெரிய கட்சி, எங்களைப் போன்ற ஒரு சிறிய அரசியல் கட்சியைக் கண்டு பயப்படலாமா?"

டெல்லியில் நகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிட்டால் அரசியலில் ஆம் ஆத்மி விலக தயார் என்று அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டெல்லி நகராட்சித் தேர்தல்

டெல்லியில் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய மூன்று நகராட்சிகள் உள்ளன. பஞ்சாயத்துராஜ் சட்டப்படி உள்ளாட்சிக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்த மூன்று நகராட்சிகளுக்கும் தேர்தலை நடத்தாமல் மத்திய அரசு தொடர்ந்து ஒத்திவைத்து வருவதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே மூன்று நகராட்சிகளையும் ஒன்றிணைக்கும் தீர்மானத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. டெல்லியில் உள்ள 3 நகராட்சிகளிலும் தேர்தலை நடத்தாமல் இருக்கவே மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக இந்த நடவடிக்கையை எடுத்ததாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

பாஜகவுக்கு சவால்

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், “பாஜக தன்னை உலகிலேயே மிகப் பெரிய கட்சி என்று கூறி வருகிறது. அவ்வளவு பெரிய கட்சி, எங்களைப் போன்ற ஒரு சிறிய அரசியல் கட்சியைக் கண்டு பயப்படலாமா? சாதாரண உள்ளாட்சித் தேர்தலை கண்டு பயப்படலாமா?” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், “டெல்லி நகராட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த மத்திய பாஜக அரசுக்குத் துணிச்சல் இருக்கிறதா? அப்படியே தேர்தல் நடத்தப்பட்டால் அதில் பாஜக வெற்றி பெற்றுவிட்டால், ஆம் ஆத்மி அரசியலிலிருந்து விலக தயாராக இருக்கிறது” என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஜெயிக்க முடியாத பாஜக

டெல்லியில் 2015-ஆம் ஆண்டைத் தொடர்ந்து 2020-ஆம் ஆண்டிலும் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றியது. டெல்லியில் 1998-ஆம் ஆண்டில் ஆட்சியை இழந்த பாஜக, இதுவரை அங்கு ஆட்சி பொறுப்புக்கு வர முடியவில்லை. 1998, 2003, 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 2013-இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி 48 நாட்கள் ஆட்சியில் இருந்தது.