பாஜகவுடன் கைகோர்த்த கெஜிரிவால்.. சிங்கப் பெண்ணாக வந்த பிருந்தா காரத்.. தலையில் அடித்து கதறும் ஜவாஹிருல்லா.
டெல்லியில் இஸ்லாமியர்கள் குடியிருப்பை புல்டோசர் வைத்து தகர்க்கும் செயலுக்கு இதுவரை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எந்த எதிர்ப்பும் காட்டாமல் மவுனம் சாதித்து வருகிறார்.
டெல்லியில் இஸ்லாமியர்கள் குடியிருப்பை புல்டோசர் வைத்து தகர்க்கும் செயலுக்கு இதுவரை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எந்த எதிர்ப்பும் காட்டாமல் மவுனம் சாதித்து வருகிறார். அவர் பாஜகவுடன் கை கோர்த்து விட்டார் என்பது இதன் மூலம் தெரிகிறது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சென்னை தாம்பரத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாகூப், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா, டெல்லியில் உள்ள இஸ்லாமியர்கள் குடியிருப்பை அகற்றுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்தனர். உச்ச நீதிமன்ற அமர்வு உடனடியாக டெல்லி இஸ்லாமிய குடியிருப்புகள் இடிப்பு நடவடிக்கையை நிறுத்த வேண்டுமென உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி தொடர்ச்சியாக புல்டோசர் கொண்டு முஸ்லிம்கள் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் அவர்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவுடன் களத்திற்கு சென்று புல்டோசர் முன்னால் நின்று அதை தடுக்கக்கூடிய வீரமிக்க செயலை நாம் கண்டோம். பாஜக பல்வேறு மாநிலங்களில் ஆள்கிறது, அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை விதிப்பதாக செயல்படுகின்றனர், அரசியலமைப்பு சட்டம் கொடுத்திருக்கிற விதிகளை எல்லாம் மீறுகிறவகையில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். முழுக்க முழுக்க டெல்லியில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளது. அவைகள் ஆக்கிரமிப்புகள் என்று சொன்னாலும் கூட அவர்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் அளித்து அவர்களிடமிருந்து உரிய விளக்கம் கேட்டு அதன்பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். ஆனால் இது எதையுமே டெல்லி அரசு பின்பற்றவில்லை.
ஒன்றிய பாஜக அரசும் அதன் செயல் வடிவமாக இருக்கக்கூடிய டெல்லி பாஜகவும் வட டெல்லி மாநகராட்சி செய்து வரக்கூடிய இந்த கொடுமைகளுக்கு டெல்லியை ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் அரவிந்த் கேஜ்ரிவால் அரசாங்கமும் உறுதுணையாக இருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைப் பற்றியும் வட டெல்லி மாநகராட்சி அனுப்பியிருக்கும் கடிதத்தில் டெல்லி அரசாங்கத்தின் பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை ஆகியவை எல்லாம் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று சொல்லப்பட்டு அவர்களின் ஒத்துழைப்புடன் தான் இந்த பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
தமக்கு வாக்களித்த மக்களின் வீடுகள் இடிக்கப்படுவது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை வாய் திறக்கவில்லை. சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக மதவாத போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பிருந்தா காரத் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி இருப்பது மட்டுமே ஆறுதலான விஷயம். இதே நேரத்தில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.