கே.சி.வீரமணி ஆதரவாளர் ராம ஆஞ்சநேயலு வீட்டுக்கு சீல்... லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆதரவாளர் ராம ஆஞ்சநேயலு வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆதரவாளர் ராம ஆஞ்சநேயலு வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி அளவிற்கு சொத்து குவித்ததாக புகார் எழுந்ததுள்ளது.
இதையடுத்து, சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வீரமணிக்கு சொந்தமான 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், திருவண்ணாமலையின் குருவிமலை கிராமத்தில் உள்ள வீரமணியின் உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது கே.சி. வீரமணிக்குத் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை, சூளைமேட்டில் உள்ள திருமலா பால் நிறுவன மேலாளர் ராம ஆஞ்சநேயலு வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. வீட்டில் யாரும் இல்லாததை அடுத்து சோதனை செய்ய வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சீல் வைத்துவிட்டு சென்றனர். வருவாய்த்துறை முன்னிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ராம ஆஞ்சநேயலு வீட்டுக்கு சீல் வைத்தனர்.