karunanidhi voice return back in public

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே !! கருணாநிதியின் கம்பீரக்குரல் விரைவில் மீண்டும் ஒலிக்கும் ?

உடல்நலக்குறை காரணமாக கடந்த ஓராண்டாக பொது வெளியில் வராமல் இருந்த திமுக தலைவர் கருணாநிதி, நேற்று கம்பீரமாக முரசொலி அலுவலகத்துக்கு வந்து, கண்காட்சியைப் பார்வையிட்டார். என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே என கருணாநிதியில் காந்தக்குரல் மீண்டும் ஒலிக்குமா ? என திமுக தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி, திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சென்னையில் இல்லாத நாட்களைத் தவிர, நாள்தோறும், அண்ணா அறிவாலயத்துக்கும் முரசொலி அலுவலகத்துக்கும் சென்று அன்றாட பணிகளைக் கவனிப்பார். இந்த வழக்கம் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது.

ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒவ்வாமை காரணமாக பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்த கருணாநிதி வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வந்தார்.

2016 நவம்பர் மாதம் ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, சிகிச்சை முடிந்தபிறகு கிட்டத்தட்ட 10 மாதங்களாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, திமுக சார்பில் முரசொலி பவளவிழா கடந்த ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. முரசொலி கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் கருணாநிதி பங்கேற்பார் என்று தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், நோய்த்தொற்று ஏற்படும் என்பதால் அவரால் விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் கருணாநிதியின் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வந்தது. அந்தப் புகைப்படங்கள் அவர் நல்ல உடல்நலத்தோடு இருப்பதையும் வெளிப்படுத்தியது.

அண்மையில் மு.க.தமிழரசுவின் பேரன், நடிகர் அருள்நிதியின் மகனை கருணாநிதி கொஞ்சிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கருணாநிதியின் உடல் நலம் நாளுக்கு நாள் முன்னேறி வருவதால் திமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்

இந்தச் சூழ்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு முறை கருணாநிதி முரசொலி பவள விழா கண்காட்சியைப் பார்வையிட வரவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகமானார்கள். ஆனால், கருணாநிதி வரவில்லை என்ற செய்தி அறிந்தவுடன் ஏமாற்றமடைந்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதி முரசொலி பவள விழா கண்காட்சியைப் பார்வையிட அழைத்து வரப்பட்டார்.

கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு முதன்முறையாக கருணாநிதி ஒரு பொதுவெளிக்கு தற்போதுதான் அழைத்து வரப்பட்டுள்ளார்.

அவருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், முரசொலி செல்வம் , துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு என திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் உடன் வந்தனர். முன்கூட்டியே தெரிவித்தால் கூட்டம் அதிகமாகிவிடும் என்பதால், கலைஞர் முரசொலி அலுவலகம் வரும் தகவல் முன்னதாக தெரிவிக்கப்படவில்லை.

கண்காட்சி அரங்கினுள் ஒவ்வொரு பகுதியாக அழைத்துச்சென்று, அது குறித்து கருணாநிதிக்கு , ஸ்டாலின் விளக்கம் அளித்துக்கொண்டே வந்தார். ஒரு மணிநேரம் முரசொலி கண்காட்சியைச் சுற்றிப்பார்த்த கருணாநிதி 8 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டார்.

கருணாநிதி வந்துள்ளதை அறிந்த தொண்டர்களும் பொது மக்களும் கோடம்பாக்கம் பாலம் முழுவதும் குவிந்தனர். அவர்களைப் பார்த்து கையசைத்த கருணாநிதி, மீண்டும் கோபாலபுரம் இல்லத்துக்குக் காரில் புறப்பட்டுச் சென்றார்.

உடல்நலக் குறைவால் ஓராண்டு காலமாக வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வரும் கருணாநிதியால் , சுவாசத்துக்காக தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள டிரக்கியாஸ்டமி குழாயினால், சந்திப்பவர்களிடம் பேச முடியவில்லையே தவிர, சந்திக்க வருபவர்களில் நெருக்கமானவர்களைப் பார்த்து அடையாளம் கண்டு கொள்கிறார்.

இந்த நிலையில் அவருக்கு தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள குழாயை அகற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த குழாயை அகற்றிவிட்டால் கருணாநிதியால் முன்புபோல் பேச முடியும் என கூறுகின்றனர்.

இதனால் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்ற கருணாநிதியின் குரல் விரையில் மீண்டும் ஒலிக்கும் என்று திமுக தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.