சோனியா வாழ்த்துக் கடிதம்….கருணாநிதியிடம் வாசித்துக்காட்டினார் உதவியாளர்…
இன்று தனது 94 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை கருணாநிதியின் உதவியாளர் அவருக்கு வாசித்துக்காட்டினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று 94-வது பிறந்த நாளாகும். இதையொட்டி அவரது பிறந்தநாளுடன், அவரது சட்டப்பேரவை வைர விழாவையும் சேர்த்து சிறப்பாக கொண்டாட தி.மு.க. தலைமை ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு பிரமாண்ட விழா நடைபெறுகிறது. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கேரள முதல்வர் பிரனாயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் அமீதுஅன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு மகிழ்ச்சியுடன் கூடிய நீண்ட ஆயுளை ஆண்டவன் அருளட்டும் என பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், வைர விழா காணும் திமுக தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அவரது வாழ்த்து கடிதத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் அவரது உதவியாளர் வாசித்து காட்டினார். அதனை மிகுந்த உற்சாகத்துடன் கருணாநிதி கேட்டார்.