தமிழிசையுடன் தடபுடலாக வந்து மனு தாக்கல் செய்த கரு.நாகராஜன்!
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில், கரு.நாகராஜன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தமிழிசையும் உடனிருந்தார்.
ஜெயலலிதா காலமானதை அடுத்து காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21 ஆம் தேதி இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகின்றன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட பிரதான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. திமுக சார்பில் மருதுகணேசும், அதிமுக சார்பில் மதுசூதனனும், சுயேட்சையாக டிடிவி தினகரனும் ஏற்கனவே மனு தாக்கல் செய்து விட்டனர். பாஜக சார்பில் போட்டியிட வேட்பாளரே கிடைக்கவில்லை என்ற செய்திகள் உலவின. இந்த நிலையில், மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியானது. ஆர்.கே.நகரில் பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்தது.
வேட்புமனு தாக்கல் கடந்த 27 ஆம் தொடங்கிய நிலையில் இதுவரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான இன்றும் சிலர் மனுதாக்கல் செய்தனர். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவருடன் தமிழிசையும் உடனிருந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், தேர்தல் அலுவலகம் முன்பு 45 சுயேட்சை வேட்பாளர்கள் வரிசையில் காத்திருந்தனர். வேட்புமனு தாக்க்ல செய்யவதற்கு கட்சியினர் வரிசையில் நிற்காமல் செல்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து, அவர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிடவும் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.