அவரால பாஸ் கிடைச்சது... வேறெந்த பலனும் கிடைக்கல... கார்த்தி சிதம்பரம் சொல்றதைக் கேளுங்க!
மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தார். அந்தக் காரணத்துக்காகவே அவரையும் எங்கள் குடும்பத்தையும் பாஜக அரசு பழிவாங்குகிறது. என் தந்தையை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சுவர் ஏறி குதித்து கைது செய்து நாடகத்தை நடத்தினார்கள்.
என் தந்தையால் நாடாளுமன்றத்தைப் பார்க்க பாஸ் கிடைத்ததை தவிர எந்தப் பலனையும் அடையவில்லை என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இரு வாரங்கள் ஆக உள்ளன. ப.சிதம்பரம் கைது குறித்து அவருடைய மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் நிறைய பேசிவிட்டார். என்றாலும், ப. சிதம்பரம் கைது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றிலும் கார்த்தி சிதம்பரம் தற்போது பேசியுள்ளார்.
“ சிறையில் என்னுடைய தந்தை நிம்மதியாகவே இருக்கிறார். எனக்கு தெரிந்தவரையில் சிபிஐ கஷ்டடியில் குறை இருப்பதாக எனத் தெரியவில்லை. அதேசமயம் அவரை ஏன் கைது செய்தார்கள், தற்போதுவரை ஏன் விசாரிக்கப்படுகிறார் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தார். அந்தக் காரணத்துக்காகவே அவரையும் எங்கள் குடும்பத்தையும் பாஜக அரசு பழிவாங்குகிறது. என் தந்தையை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சுவர் ஏறி குதித்து கைது செய்து நாடகத்தை நடத்தினார்கள்.” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
உங்கள் தந்தையால் நீங்கள் பெரிய அளவில் பலன் அடைந்ததாக சிபிஐ குற்றஞ்சாட்டியிருக்கிறதே என கார்த்தி சிதம்பரத்திடம் கேட்டதற்கு, “என் தந்தையால் எந்தப் பலனையும் நான் அடைந்ததில்லை. அவர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நாடாளுமன்றத்துக்குள் வர பாஸ் தருவார்கள். அந்தப் பலனை தவிர எந்தப் பலனையும் நான் அடைந்ததாக தெரியவில்லை” என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.