2ஜி வழக்கில் கார்த்தி சிதம்பரம் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்…சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

2ஜி அலைக்கற்றை வழக்கில் அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி, கார்த்தி சிதம்பரம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அரசியல் ரீதியாக தர்மசங்கடம் ஏற்படுத்தும் வகையிலும் தன் மகனுக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கின், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.