கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்ததையடுத்து வேறு வழியில்லாமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்ததையடுத்து வேறு வழியில்லாமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கர்நாடகாவில் கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவான போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை அக்கட்சியால் பெற முடியாமல் போனது. இதனால் அப்போது காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. இருப்பினும், இந்த அரசு 2019ஆம் ஆண்டு கவிழ்ந்தது. 

அதைத் தொடர்ந்து பாஜக தலைமையில் கர்நாடக அரசு உருவானது. கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். இவருக்கு 78 வயதாகி விட்டதால், பாஜக கட்சியின் கொள்கைப்படி பதவியில் இருந்து விலக வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்யும்படி கர்நாடக பாஜக எம்எல்ஏ.க்கள், அமைச்சர்களில் ஒரு பிரிவினர் கடந்த சில மாதங்களாக போர்க்கொடி தூக்கி வந்தனர். இதனால், எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. 

இந்நிலையில், எடியூரப்பா அண்மையில் தனது மகன் விஜயேந்திராவுடன் அவசரமாக டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். பின்னர், கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று எடியூரப்பா அறிவித்தார். ஆனால், அவர் ராஜினாமா செய்தால் கர்நாடகாவில் பாஜக கடும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று பாஜக தலைமைக்கு லிங்காயத்து மடாதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில், 2 ஆண்டு ஆட்சி நிறைவு பெறுவதை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏ.க்களுக்கு பெங்களூருவில் இன்று காலை எடியூரப்பா விருந்து அளித்திருந்த நிலையில் இன்று முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்து பிற்பகலில் எடியூரப்பா ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.