Karnataka governor invites the winner of Karnataka election to sworn the CM post

பி.எஸ்.எடியூரப்பா நாளை காலை ராஜ் பவனில் வைத்து கர்நாடக முதல்வராக பதவியேற்கிறார். கர்நாடக கவர்னர் வாஜுபாய் வாலா, எடியூரப்பாவை கர்நாடக முதல்வராக நாளை பதவி ஏற்க அழைப்புவிடுத்துள்ளார். மேலும் 15 நாட்களுக்குள் அவையில் வைத்து கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் படி, கவர்னர் எடியூரப்பாவிற்கு அவகாசம் அளித்திருக்கிறார்.

இதை தொடர்ந்து கர்நாடகவில் வெற்றி பெற்றுள்ள சில சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மற்றும் பிற எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பா.ஜ.க கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் என பா.ஜ.க உறுதிபட நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வாஜூபாய் வாலா எடியூரப்பாவை பதவி ஏற்க விடுத்திருக்கும் இந்த அழைப்பு குறித்த பிற பா.ஜ.க தலைவர்களுக்கும் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, ஜனதா தள கட்சி தலைவர் குமாரசாமியிடம் கவர்னர் உங்களுக்கு அழைப்புவிடுக்கவில்லை எனில் இந்திய பிரதமரை சந்திக்கும் படி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் போது காங்கிரசுக்கு கவர்னர் அழைப்புவிடுக்கவில்லை எனில், அபிஷேக் மனு சிங்வி-ன் வழிகாட்டுதலில் காங்கிரஸ் நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது.

முன்னதாகவே இந்த பதவி ஏற்பு விழா குறித்து ப.ஜ.க தலைவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா, கர்நாடகாவில் இன்னும் இரண்டு தினங்களில் பா.ஜ.க ஆட்சி அமைப்பது உறுதி என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.