"எம்எல்ஏ சரவணன் வீடியோ உண்மையில்லை" - பன்னீர் அணிக்கு ஆதரவு கரம் நீட்டும் பெங்களூரு புகழேந்தி
பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ சரவணன் பேசியது குறித்த வீடியோ உண்மையில்லை என கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுக எனும் எஃகு கோட்டை இரண்டாக பிரிந்ததையடுத்து முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை கழுவி கழுவி ஊற்றுபவர்களில் முதல் ஆளாய் திகழ்பவர் டிடிவி தினகரனின் தீவிர விசுவாசியான கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியின் தலைமையாக பொறுப்பேற்ற சசிகலாவிற்கு ஆதரவாய் செயல்பட்டு வந்த புகழேந்தி முதலமைச்சராக இருந்த ஒ.பி.எஸ்ஸை ஓரம்கட்டுவதில் பல முன்னேற்பாடுகளை செய்ததாக தெரிகிறது.
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அதிமுக அரசுக்கு எதிராக பலமுறை சசிகலாவை சிறையில் சென்று பார்த்து வந்தார்.
சசிகலா சிறைக்கு சென்ற பின், துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனுக்கு தீவிர விசுவாசியாக மாறினார் புகழேந்தி.
ஒ.பி.எஸ் அணியினரின் வற்புறுத்தலால் டிடிவி தினகரனை கட்சியில் இருந்த ஒதுக்க எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்த போது தினகரனை விலக்கினால் அதிமுக நிலை குலைந்து விடும் என பரப்புரை மேற்கொண்டு வந்தார்.
மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணபட்டுவாடா செய்தது மற்றும் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் சிறைக்கு சென்ற போதும் பலமுறை புகழேந்தி தினகரனை சந்தித்து வந்த புகழேந்தி தினகரனுக்கு ஆதரவாக மாபெரும் தனி கூட்டத்தை உருவாக்கினார்.
இதனிடையே சசிகலா அணியில் இருந்து முதன் முதலாக வெளியே வந்து பன்னீர் அணியில் இணைந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் எம்.எல்.ஏக்களுக்கு பேரம் பேசப்பட்டதாக கூறிய வீடியோ ஒன்று ஆங்கில தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போதாத குறைக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் பணபட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுக அம்மா அணியினர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளதும் அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுகவின் புட்டு ஒவ்வொன்றாக வெளிவருவதை கண்ட புகழேந்தி ஒ.பி.எஸ் அணியினருக்கு சப்பை கட்டு கட்ட ஆரம்பித்துள்ளார்.
அதாவது பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ சரவணன் பேசியது குறித்த வீடியோ உண்மையில்லை எனவும், ஆர்.கே.நகர் வாக்களர்களுக்கு பணம் தந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை எனவும் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் வெற்றி பெற்று முதல்வராவதை தடுக்கவே அவர் மீது குற்றசாட்டுகள் கூறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எது எப்படியோ புகழேந்தியின் இந்த வாக்குமூலம் எடப்பாடியை ஒதுக்கி விட்டு தினகரன் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதையே காட்டுகிறது.