Karaikudi women send chappels to Minister to show their condumn
நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றும் வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியைப் பிடிக்கலாம் என கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காரைக்குடி நகரத்தார் சமூக பெண்கள் அவருக்கு காலணிகளை அனுப்பி வைத்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பாரா? என கேள்வி எழுப்பினர்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, நடிகர் ரஜினிகாந்த் ஒருக்காலும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆடியாது என்றும், வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியைப் பிடிக்கலாம் என தெரிவித்தார்.

ஆட்சியைப் பிடிப்பது மக்கள் கையில்தான் இருக்கிறது. மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் நடக்கும் அதை ரஜினி முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சு நகரத்தார் சமூக பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என காரைக்குடி நகரத்தார் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஆச்சி என்பது நகரத்தார் சமூகத்தில் மணமான பெண்களைக் குறிக்கின்ற மரியாதைக்குரிய சொல் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் செல்லூர் ராஜுவைக் கண்டித்து காரைக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனிடையே அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காரைக்குடி நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அவருக்கு காலணிகளை பார்சலில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
