டாஸ்மாக் திறப்பு மிகப்பெரிய ஆபத்தை தரப்போகுது..! எச்சரிக்கும் கனிமொழி..!
கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், அரசின் இம்முடிவு நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும். மேலும், தற்போதைய சூழலில் டாஸ்மாக்கை திறப்பதால் குடும்ப வன்முறை அதிகரிக்கும் அபாயத்தையும் அரசு உணராமல் இருக்கிறது. எனவே, டாஸ்மாக்கை திறக்கும் முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும்.
இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மே 7ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
நோய் தொற்று அதிகம் இருக்கும் பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது எனவும், கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்கடைகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்கப்படும் எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. அதன்படி தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் தலைநகர் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என அரசு தெரிவித்துள்ளது. எனினும் மதுக்கடைகள் திறப்பது கொரோனா வைரஸ் பரவுதலை மேலும் அதிகரிக்கும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போதைய நிலையில் மதுக்கடைகளை திறப்பதாக தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு ஆபத்தை விளைவிக்கும் என திமுக மகளிரணி செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதியை வாங்காமல் டாஸ்மாக் கடைகளை திறக்க நினைக்கும் தமிழக அரசு, வாழ்வாதாரமின்றி வாடும் மக்களிடம் இருந்து வருவாயைப் பெற்றுக் கொள்ள நினைக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், அரசின் இம்முடிவு நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும். மேலும், தற்போதைய சூழலில் டாஸ்மாக்கை திறப்பதால் குடும்ப வன்முறை அதிகரிக்கும் அபாயத்தையும் அரசு உணராமல் இருக்கிறது. எனவே, டாஸ்மாக்கை திறக்கும் முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.