திருவள்ளுவருக்கு காவி உடை..! திருக்குறளுக்கும் காவிக்கும் சம்பந்தமில்லை - அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி
திருக்குறளை படித்தால் காவிக்கும் திருக்குறளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என புரிந்து கொள்வார்கள் என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, திமுக எம்பி கனிமொழி பதிலளித்துள்ளார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என கூறிய அய்யன் திருவள்ளுர் தினத்தையொட்டி பல்வேறு இடங்களில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிறப்புமிக்க இந்த திருவள்ளுவர் தினத்தில், வாழ்வியலை மையமாக வைத்து, மக்களுக்குத் தேவையானது, தேவையற்றதை தெளிவாகச் சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுவோம். கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் திருவள்ளுவருக்கு காவி உடையும், நெற்றியில் விபூதி பட்டையும், ருத்திராட்சம் அணிவித்து இருப்பது போல் வெளியிட்டுள்ள படம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்க்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் திமுக சார்பில் வட சென்னை பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்தனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பங்கேற்று பெண்கள் வைத்த பொங்கலை பார்வையிட்டனர். இதன் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, பொங்கல் பண்டிகை ஒவ்வொரு மதத்திற்கு பொருந்த கூடிய பண்டிகை எனவும் பொங்கல் திருநாள் எந்த மதத்தவராக இருந்தாலும் எந்த பகுதியை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர் என்ற உணர்வை பற்றி அனைவரும் கொண்டாடும் திருநாள் பொங்கல் திருநாள் எனவும் பெருமையுடன் கூறினார்.
நம்மை சீண்டி பார்க்க நினைத்தால், முதலமைச்சர் சொன்னது போல் ஒவ்வொரு விட்டு வாசலிலும் ’தமிழ்நாடு வாழ்க’ என்று சொல்லும் உணர்வு நம்மிடம் உள்ளதாக தெரிவித்தார். மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்ப கூடியவர்கள் சவால் விடும் வகையில் பொங்கல் விழாவை நடத்தி வருகிறோம் என கனிமொழி தெரிவித்தார். இதன் தொடர்ந்து கொண்டித்தோப்பு பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட கனிமொழி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருவள்ளுவர் படத்திற்கு காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படம் வெளியிட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது அதற்க்கு பதில அளித்த அவர், திருக்குறளை படித்தால் காவிக்கும் திருக்குறளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என புரிந்து கொள்வார்கள். திருக்குறளை படிக்க வேண்டும். திருக்குறளுக்கான கருணாநிதி உரை தெளிவாக உள்ளது. அதை படித்தாலே புரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார் .