மேட்டுப்பாளையத்தில் 17 பேர் மரணம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்... கமல்ஹாசன் அதிரடி!
இது ஒரு விபத்தென்றாலும், இதில் ஏதேனும் தவறு நடந்திருக்குமாயின், அரசும், காவல்துறையும் நேர்மையுடன் அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும். எத்தனை நிவாரணம் கிடைத்தாலும் இந்த இழப்பை ஈடு செய்ய இயலாது.
மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த விபத்தில் எத்தனை நிவாரணம் அளித்தாலும் அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூரில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த விபத்தால் ஏற்பட்ட மரணம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அது தீண்டாமை சுவர் என்ற புகாரும் கூறப்பட்டுவருகிறது. இந்நிலையில் 17 மரணத்துக்குக் காரணமான சுற்றுச்சுவரைக் கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பல்வேறு அரசியல் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். இது ஒரு விபத்தென்றாலும், இதில் ஏதேனும் தவறு நடந்திருக்குமாயின், அரசும், காவல்துறையும் நேர்மையுடன் அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும். எத்தனை நிவாரணம் கிடைத்தாலும் இந்த இழப்பை ஈடு செய்ய இயலாது. வரும் காலங்களில் மக்கள் கவனத்துடனும், அரசு முன்னெச்சரிக்கையுடனும் இருந்து, பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.