மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதனையடுத்து கமல் வீடு மற்றும் அலுவலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின்பேரில், மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக 153 ஏ, 295 ஏ ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே டெல்லி உயர் நீதிமன்றத்தில் கமலுக்கு எதிராக பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா நேற்று வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தமிழ்நாட்டில் நடந்த விவகாரத்திற்கு சென்னைக்கு பதில் டெல்லியில் ஏன் வழக்கு தொடர்ந்தீர்கள் என கேள்வி எழுப்பினர். தேர்தல் ஆணையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் கமல் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.