அந்தளவுக்கு பணம் என்கிட்ட இல்லீங்க...! இதில் அரசை விமர்சிக்க மாட்டேன்.. - கமல் ஓபன் டாக்...!
எல்லா நேரத்திலும் அரசை விமர்சிக்க மாட்டேன் எனவும் குரங்கணி காட்டுத் தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை எனவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியின் கொழுக்கு மலைக்கு திருப்பூரில் இருந்தும் சென்னையில் இருந்தும் 26 பெண்கள், 8 ஆண்கள், 3 குழந்தைகள் உள்பட 40 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர். இவர்கள் இன்று திங்கள்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மலை ஏறி திரும்பும் போது அவர்கள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் தனிதனியாக பிரிந்து சென்றுள்ளனர். அதில் இதுவரை 27 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை மீட்கப்பட்டவர்கள் அனைவரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு காவல் ஆய்வாளரால் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அக்கட்சியின் சார்பாக ரூ. 10 வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் குரங்கணி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவீர்களா என கமலஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த கமல், குரங்கணி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை எனவும் அரசு நிவாரணம் கொடுக்கிறது என்றால் அது மக்கள் பணம், நான் கொடுப்பது நான் சம்பாதித்த பணம் எனவும் தெரிவித்தார்.
எல்லாவற்றிற்கும் நிவாரணம் என்றால் நான் சம்பாதித்த பணம் போதாது எனவும் எல்லா நேரத்திலும் அரசை விமர்சிக்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்.