மைக் இடித்த கோபம்... பேட்டி கொடுக்காமல் புறக்கணித்து ஓடிய கமல்!
சனிக்கிழமை நேற்று மலேசியாவில், நட்சத்திரக் கலை விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மலேசியா சென்றிருந்தார் கமல்ஹாசன். பின்னர் இன்று காலை அவர் விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார். அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டிக் கொடுக்காமல் புறக்கணித்துச் சென்றார்
தற்போது அரசியல் களம் ரஜினி வருகையால் சூடுபிடுத்துள்ளது. ஏற்கெனவே அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து, ஆளும் கட்சியினராலும் அமைச்சர்களாலும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார் கமல். இந்நிலையில் திடீரென ரஜினி தாம் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும், அரசியல் களம் சூடுபிடித்தது. இந்நிலையில், ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த பின்னர், கமலுடன் முதல் முறையாக மலேசியாவில் சந்தித்துப் பேசினார்.
இவ்வாறு பரபரப்பான சூழ்நிலையில், செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை வைத்துக் கொண்டு, சென்னை விமான நிலையத்தில் கமல் ஹாசனை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். கமல் வரும் நேரத்தில், செய்தியாளர்கள் ஆர்வத்துடன் கூடியபோது, கமல் மீது மைக் இடித்துவிட்டதாம். இதனால் கோபப்பட்ட நடிகர் கமல்ஹாசன், செய்தியாளர்களுக்கு பேட்டி எதுவும் கொடுக்காமல் அவர்களைப் புறக்கணித்துச் சென்றார்.
இருப்பினும் செய்தியாளர்கள் அவரை பின் தொடர்ந்து சென்று பதில் அளிக்குமாறு வலியுறுத்திக் கேட்டனர். ஆனாலும், அவர்களிடம் ஒன்றும் பேசாமல், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி அவசர அவசரமாகப் புறப்பட்டுச் சென்றார் கமல் ஹாசன்.
ரஜினி அரசியலுக்கு வருவதில் பலருக்கும் தவிப்பு இருப்பதை அண்மைக்கால எதிர்ப்புகளை வைத்து உணரலாம். கமல் ஹாசனும் அரைகுறை மனதுடன் ரஜினிக்கு வாழ்த்து சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.