kamal will meet farmers and discuss about problems
கமல் அரசியல் களம் காணப்போவதை உறுதிசெய்யும் வகையில், டுவிட்டர் பதிவிற்கும் அப்பாற்பட்டு மக்கள் பிரச்னைகளுக்காக கமல் களமிறங்கியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் தற்போதைய பிரதான பேசுபொருளாக விளங்குவது கமலின் அரசியல் பிரவேசம். அதிமுக அரசுக்கு எதிராக அதிரடியான கருத்துகளையும் அரசின் மீதான விமர்சனங்களையும் முன்வைத்து தனது அரசியல் பிரவேசம் குறித்த சமிக்ஞைகளை வெளியிட்டார் கமல்.
அரசுக்கு எதிரான விமர்சனங்களை தொடர்ச்சியாக டுவிட்டரில் பதிவு செய்துவந்தார் கமல். சென்னை எண்ணூர் கழிமுக பகுதியில் கொசஸ்தலையாற்றில் அனல் மின்நிலையங்கள் சாம்பல் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எச்சரிக்கை அறிக்கையை டுவிட்டரில் பதிவிட்டார்.
அத்துடன் நின்றுவிடுவார் என்று நினைத்து கொண்டிருந்த அரசியல் கட்சியினருக்கு, அவர் எண்ணூருக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது.
மக்கள் பிரச்னைகளுக்காக களம் காண்பேன் என்பதை உணர்த்தும் வகையிலேயே அந்த செயல் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்ததாக விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்கிறது. தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விவசாயிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சுமார் 500 விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகளைக் கமல் கேட்டறிய உள்ளார்.
நவம்பர் 7-ம் தேதி கமலின் பிறந்தநாள் அன்று, அவரது நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் கமல். அரசியலுக்கு வருவதன் முன்னோட்டமாக அன்றைய தினம் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளார் கமல். மேலும் அன்றைய சந்திப்பின்போது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் அரசியல் பிரவேசம் குறித்தும் தமிழகத்தில் விவசாயிகள் பிரச்னைகள் உள்ளிட்ட பிரதான பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், அதற்கு முன்னதாக விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளின் அடிப்படை பிரச்னைகளைக் கமல் கேட்டறிய உள்ளார். நவம்பர் 4-ம் தேதி விவசாயிகளுடனான சந்திப்பின்போது, விவசாயிகளின் பிரச்னையைத் தீர்ப்பதற்கான தனது திட்டங்கள் குறித்தும் கமல் விவசாயிகளிடம் விளக்குவார் என கூறப்படுகிறது.
அரசியல் களம் காண்பதற்கான முன்னோட்டமாக விவசாயிகளை சந்திக்கிறார் கமல். இதன்மூலம் அவரது அரசியல் பிரவேசம் தீவிரமடைந்ததை உணர முடிகிறது. விவசாய சங்கங்களை அடுத்து நெசவாளர் சங்கங்கள், மீனவ சங்கங்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளையும் கேட்டறிய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே விரைவில் நேரடியாக அரசியலில் கால் பதித்து கட்சியின் பெயரையும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சமிக்ஞைகள் தான் இந்த சந்திப்புகள்..
