“காசு பணத்துக்காக கமல் எதையும் செய்வார்...!!!” - சீறி பாயும் அமைச்சர் சி.வி.சண்முகம்...!!!
காசு பணத்துக்காக கமல் எதையும் செய்வார் என அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறினார்.
நடிகர் கமலஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக உள்ளது என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை மாநக கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர்.
அந்த புகார் மனுவில், இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிப்பதுடன், கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கு பதில் அளித்த நடிகர் கமல், “என்னை கைது செய்தால் செய்யட்டும். சட்டம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார். மேலும், தமிழக அரசின் அனைத்து துறையிலும் ஊழல் பெருகிவிட்டது என கருத்து தெரிவித்தார்.
இதற்கு தமிழக அமைச்சர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர், நடிகர் கமலை பகிரங்கமாக மிரட்டும் தொனியில், நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இதையொட்டி, விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நடிகர் கமலஹாசன் பணத்துக்காகவும், ஆதாயத்துக்காகவும் ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். கமலஹாசனின் முழு முயற்சியால் தான் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசுகிறார்.
சினிமாவில் வாய்ப்பு பறிபோனதால் தற்போது 3ம் தர நடிகராக பேசி வருகிறார். பெண்களை பற்றி பேச கமலுக்கு தகுதி இல்லை. கமலஹாசன் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வருகிறார். காசு பணத்துக்காக எதையும் அவர் செய்வார். கமலஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.