சுகாதாரம் குறித்து தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் ஆய்வு செய்தால் டெங்குவை தடுக்கலாம் !!! பொன்.ராதாகிருஷ்ணன் யோசனை !!!
எண்ணூர் கழிமுகம் பகுதியை ஆய்வு செய்தததைப் போல், சுகாதாரம் குறித்து தமிழகம் முழுவதும் கமல் ஆய்வு செய்தால் டெங்குவை தடுத்துவிடலாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் யோசனை தெரிவித்துள்ளார்.
கொசஸ்தலை ஆற்றில் எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்களின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அங்கிருந்த பொது மக்களை சந்தித்த கமல்ஹாசன், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இது குறித்து சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எண்ணூர் கழிமுகம் பகுதியை பார்வையிட்ட கமல்ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
எண்ணூர் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை மீட்கவும், அப்பகுதியை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
சுகாதாரம் குறித்து தமிழகம் முழுவதும் கமலஹாசன் ஆய்வு செய்தால் டெங்குவை தடுத்துவிடலாம் என்றும் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.