அரிதாரத்தை நம்பி அரசியலுக்கு வரக்கூடாது; கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கருணாஸ், தனியரசு கருத்து
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவை, கோட்டைமேடு பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னதாக கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினர். மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து சிலரின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிபிஐ விசாரணை அமைத்தாலும் தாங்கள் அதனை வரவேற்பதாக தெரிவித்தனர்.
நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வருவது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்கள், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறினர்.
அரிதாரத்தை மட்டும் நம்பி வரக்கூடாது என்றும், மக்கள் பணி செய்து வர வேண்டும் என்றும் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கூறினர்.