கலாமிடமிருந்து கட்சி துவங்கும் கமல்ஹாசன்: மைனாரிட்டி வாக்கு வங்கிக்கு வட்டம் போடுகிறாரா?
இந்த நாள் கமல்ஹாசனின் நாள்! இன்று அவர் என்ன செய்கிறார்? என்னென்ன செய்கிறார்? என்று தேசமே கவனித்துக் கொண்டிருக்கிறது.
சினிமாவின் வாயிலாக தமிழன்! தென்னிந்தியன்! எனும் நிலைகளை தாண்டி தேசம் முழுக்கவே அவரது ஆளுமை வியாபித்திருக்கிறது. சினிமா வாயிலாக ‘உலக நாயகன்’ பெயரையும் பெற்றிருக்கும் பன்முக வித்தைக்காரரான கமல்ஹாசனை உலகத்தில் பல கோடி கண்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில் இன்று கட்சி துவங்கும் அவர், தன் அரசியல் பயண துவக்கத்தின் முதல் நிகழ்வாக இராமேஸ்வரத்திலுள்ள முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் இல்லத்துக்கு வருகிறார்! பின் கலாம் படித்த பள்ளிக்கு செல்கிறார்! பின் கலாமின் நினைவிடத்தில் மரியாதை செய்கிறார்.
கட்சி துவங்கும் கமல் செய்யும் முதல் காரியங்கள் இப்படி கலாமை சுற்றியபடியே இருப்பது சிறுபான்மை வாக்கு வங்கியை ஈர்க்கவா? எனும் நோக்கில் விமர்சிக்கப்படுகிறது. என்னதான் அப்துல்கலாம் விஞ்ஞானி, முன்னாள் ஜனாதிபதி, இளைஞர்களின் நாயகன்! என்றெல்லாம் பார்க்கப்பட்டாலும் கூட அடிப்படையில் அவர் ஒரு இஸ்லாமியர்.
நாத்திகம் வழியே திராவிட அரசியல் செய்ய இருக்கும் கமல்ஹாசன், தி.மு.க.வின் வழியில் ’மதத்தை மறுப்பேன்! ஆனால் மைனாரிட்டியை ஆதரிப்பேன்’ எனும் நிலைப்பாட்டை எடுத்துள்ளாரா! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளோடு ஏக நெருக்கம் காட்டுகிறார் கமல். அவர்களும் இப்படித்தான் மைனாரிட்டி மதத்தை மட்டும் போற்றுபவர்கள்! இதுதான் கமலின் வழியா இனி?என்று கேள்விகளை முன்வைக்கிறார்கள் விமர்சகர்கள்.
ஆக கலாமை தொட்டு கட்சி துவங்கும் கமல்ஹாசானின் இந்த செயல் ‘சிறுபான்மையினரை நோக்கிய அவரது செயல்பாடு’ என்று விமர்சிக்கப்படுவதில் வியப்பில்லை.