Asianet News TamilAsianet News Tamil

மக்கள் நீதி மய்யம் பாஜக ரசிகர்கள் அல்லர்...! வன்முறையால் அதை வெல்ல முற்படுவது மிருக குணம்- கமல்ஹாசன் ஆவேசம்

அமைதிப் பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தை, வெடிகுண்டு கலவர கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி, சட்டம்-ஒழுங்கையும், அமைதியையும் பாதுகாக்க வேண்டும் என கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Kamal Haasan has requested that those involved in violence should be suppressed with an iron hand
Author
First Published Sep 25, 2022, 11:54 AM IST

கலவரத்தை தூண்டும் செயல்

கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தோரின் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்புச் சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரே நாளில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான போலீஸார் மற்றும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் இதுபோன்ற வன்முறையைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். இத்தகு சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் கலவரங்களைத் தூண்டிவிடக்கூடிய அபாயம் மிக்கவை.

Kamal Haasan has requested that those involved in violence should be suppressed with an iron hand

இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

மக்கள் நீதி மய்யம் பாஜக ரசிகர்கள் அல்லர். ஆனால் ஜனநாயகத்தின் தொண்டர்கள். அரசியல் மக்களுக்கானது. வன்முறையால் அதை வெல்ல முற்படுவது மிருக குணம். மிருக குணம் கொண்டோர் எவராயினும் அவர்கள் நாட்டில் திரியவேண்டியவர்கள் அல்ல. நாங்கள் வன்முறையை கைக்கொள்ளும் எத்தரப்பிற்கும் எதிரானவர்கள். எதிர்வரும் காந்தி ஜெயந்தியை ரத்தத்தால் கொண்டாடலாம் என நினைப்பவர்களை மக்கள் நீதி மய்யமும், நானும் வன்மையாக எதிர்க்கிறோம். எந்தச் சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம். அமைதிப் பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தை, வெடிகுண்டு கலவர கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி, சட்டம்-ஒழுங்கையும், அமைதியையும் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்துகிறது என கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகள் கைது..! தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் டிஜிபி எச்சரிக்கை

 

Follow Us:
Download App:
  • android
  • ios