kamal do not know about politics
ரஜினிகாந்த் இன்று முதல் 31ம் தேதி வரை தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இன்றைய நிகழ்ச்சியில் இயக்குநர் மகேந்திரன், தயாரிப்பாளரும் கதாசிரியருமான கலைஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வருவதில் மக்களை விட ஊடகங்கள்தான் அதிக ஆர்வத்தில் உள்ளன. போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றேன். போர் என்றாரே.. போர் எப்போது வரும்? என்றெல்லாம் கேட்கிறார்கள். போர் என்றால் தேர்தல் தான்.
போரில் இறங்கினால் வெற்றி பெற வேண்டும். அதற்கு வீரம் மட்டும் போதாது. வியூகமும் வேண்டும். ஆழம் பார்க்கவேண்டும். கஷ்டநஷ்டங்கள் பார்க்கவேண்டும். எல்லாம் பார்த்த பிறகுதான், தெரிந்து கொண்ட பிறகுதான் எதுவுமே சொல்லமுடியும். 31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டைச் சொல்கிறேன்.
அரசியல் தொடர்பான முடிவெடுக்க நான் இழுத்தடிக்கிறேன் என்கிறார்கள். நான் அரசியலுக்கு புதிதல்ல. அரசியல் பற்றி நன்கு தெரிந்தவன் நான். அதனால்தான் உடனடியாக முடிவெடுக்க தயங்குகிறேன். அரசியலைப் பற்றி சரியாக தெரியாவிட்டால், வருவது வரட்டும் என உடனடியாக அரசியலில் இறங்கிவிடலாம். ஆனால் நான் அரசியலை நன்கு அறிந்தவன் என்பதால் தான் தயங்குகிறேன் என ரஜினி பேசினார்.
தனது அரசியல் பிரவேசம் குறித்து திட்டவட்டமாக கமல் அறிவித்துவிட்டார். அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் முதல்வராக விரும்பும் தனது ஆசையையும் கமல் வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். ஆனால், அரசியல் பிரவேசம் குறித்து இதுவரை வெளிப்படையாக அறிவிக்காத ரஜினியோ, வரும் 31ம் தேதி சொல்கிறேன் என்றிருக்கிறார்.
ரஜினியை போன்று கமல் யோசிக்கவில்லை. கமல் அதிரடியாக தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். இந்நிலையில், அரசியலை பற்றி நன்கு தெரிந்ததால்தான் யோசிக்கிறேன். இல்லையென்றால் அதிரடியாக வந்திருப்பேன் என்ற ரஜினியின் பேச்சு, அதிரடியாக அரசியல் அறிவிப்பை வெளியிட்ட கமலை மறைமுகமாக விமர்சிப்பதாக உள்ளது.
