ராமதாஸை கலங்கடிக்கும் காடுவெட்டி குரு குடும்பத்தினர்.. திமுகவுக்கு ஆதரவாக பாமக தொகுதிகளில் ஸ்பெஷல் வியூகம்!
பாமக போட்டியிடும் 23 தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களை எதிர்த்து திமுகவுக்கு ஆதரவாக மறைந்த காடுவெட்டி குருவின் மகள் மற்றும் உறவினர்கள் களமிறங்கியுள்ளனர்.
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா இந்தத் தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் களமிறங்கியுள்ளார். பாமக வழக்கறிஞர் பாலுவை குறி வைத்து இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் கூட்டணில் போட்டியிடுகிறார். இந்நிலையில் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, அவருடைய கணவர் மனோஜ், குருவின் சகோதரி செந்தாமரை ஆகியோர் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு தருமபுரி எம்.பி. செந்திலோடு அறிவாலயத்துக்கு வந்த இவர்கள், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். இதனையடுத்து தற்போது இந்த மூவரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. விருதாம்பிகை, மனோஜ், செந்தாமரை ஆகியோர், வட மாவட்டங்களில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்ய உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இவர்கள் மூவரும் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். பாமக வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் காடுவெட்டி குருவின் குடும்பத்தினரும் உறவினர்களும் தீவிரமாக உள்ளனர். குருவின் மனைவி சொர்ணலதா தேர்தலிலேயே களமிறங்கியுள்ள நிலையில். அவருடைய மகள், மருமகன், தங்கை ஆகியோரும் தற்போது பாமகவுக்கு எதிராக அணித் திரண்டிருக்கிறார்கள்.