நானா ஓசி சோறு? அழகிரி மகனை மீண்டும் டென்ஷனாக்கும் வீரமணி!
"என் தகுதிக்கு காற்றில் பறக்கும் குப்பைக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என ஓசி சோறு கமெண்டுக்கு வீரமணி பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார் மு.க.அழகிரி. அழகிரியின் அதிரடி ஆட்டம், கடந்த 5 ஆம் தேதியோடு ஆறிப்போய்விட்டது என்றே சொல்லலாம். ஏறக்குறைய ஒரு மாதகாலமாக அழகிரி அதிரடி பேட்டிகளையே அளித்து வந்தார். அதிலும், தென் மாவட்டத்தில் தனக்கு மிகுந்த பலமிருப்பதாகவும், ஸ்டாலின் உருவாக்கப்பட்ட தலைவர், நான் உருவான தலைவர் என்றும் கூறி வந்தார்.
ஒரு லட்சம் தாண்டர்களுடன் பேரணியாக வந்து தனது பலத்தைக் காட்டப்போவதாக அழகிரி தெரிவித்திருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி என்ற வகையில் விருந்து சாப்பிட்டு போறவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என கொஞ்சம் வாய்க்கொழுப்போடுதான் கூறிவிட்டார். இதைப்பார்த்து சும்மா இருப்பாரா அழகிரியின் அதிரடி வாரிசு.
திமுக - அதிமுக என இரண்டு பக்கமும் ஓசி சோறு சாப்பிட்டவர்களெல்லாம் என்னைப்பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டரில் அதிரடி வைரலாகும் அளவுக்கு தனது கருத்தை பதிவு செய்து விட்டு சிம்பிளாக சென்று விட்டார். இந்த ஓசி சோறு கமெண்ட் மிகப்பெரிய ட்ரெண்டிங் ஆகிப் போனது.
இது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை மிகப்பெரிய கோபத்துக்கு ஆளாக்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த ஓசி சோறு கமெண்ட் குறித்து சில தினங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் செய்தியாளர், கி.வீரமணியிடம கேள்வி கேட்டார். இந்த கேள்வியை எதிர்பார்க்காத வீரமணி, சடாரென கோபத்தோடு எழுந்து நடக்க ஆரம்பித்தார்.
பின்னர் கேமரா ஆனில் இருப்பது தெரிந்து, சுதாரித்துக்கொண்டு எங்கெங்கோ காற்றில் பறக்கும் குப்பைகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என அழகிரி மகனை பெயர் சொல்லாமல் அதிரடியாக விமர்சனம் செய்தார்.
துரை.தயாநிதி மீதானா வீரமணியின் விமர்சனம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரம்தான் இருந்தாலும், அவரும் கருணாநிதியின் பேரன்தானே என ஆதரவு குரல் எழுப்புகிறார்கள் அழகிரியின் தொண்டரடி பொடியர்கள்
எது எப்படியோ, அழகிரியின் மகன் துரைதயாநிதி மற்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி ஆகியோரிடையே இந்த வார்த்தைப்போர் செய்தியாளர்கள் வாயைக் கிளறுவதை நிறுத்தும் வரை இந்த சண்டை ஓயாது.