இந்தியாவிலேயே தொற்று நோயால் பாதிக்கப்பட்ட முதன்மை மாநிலமாக இருக்கிற மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் இருந்து வருகிறது. எண்ணிக்கை கூடுவதைப் பற்றி கவலைப்படாத சுகாதாரத்துறை அமைச்சர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது என அடிக்கடி கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. இத்தகைய செயல்களின் மூலமாக வேகமாக பரவி வரும் கொரோனாவை தமிழக அரசால் எதிர்கொள்ள முடியுமா என்கிற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது
வரும் ஜுன் மாத இறுதியில் சென்னையில் மட்டும் கொரோனா தொற்று 2 லட்சத்தை தாண்டும் என்றும், 1,400 பேர் உயிரிழக்கக் கூடும் என்றும் தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று நோயை பொறுத்தவரை, மத்திய - மாநில அரசுகளின் தவறான அணுகுமுறைகளின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் 1ம் தேதி தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 234 ஆக இருந்தது. ஆனால், மே 3ம் தேதி 3 ஆயிரமாக உயர்ந்து மே 29ம் தேதி 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கு அதிமுக ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளே காரணம். தொடக்கத்திலிருந்தே பரிசோதனை கருவிகள் வாங்குவதில் பல்வேறு குளறுபடிகள், கோயம்பேடு மொத்த காய்கறி வியாபார சந்தையில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை அனுமதித்ததில் சென்னை மாநகராட்சி செய்த இமாலய தவறு போன்ற காரணங்களால் சென்னை மாநகரம் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி தவித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் வியாழக்கிழமை 15 பேர், வெள்ளிக்கிழமை 22 பேர் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி கடும் அதிர்ச்சியைத் தருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது மக்களிடையே அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை வரை தமிழகத்தில் நிகழ்ந்த 50 சதவிகித இறப்புகள், தொற்று ஏற்பட்டு 48 மணி நேரத்துக்குள் நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனரக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை தினசரி நிகழ்ந்த இறப்புகளில் இதுவே அதிகபட்சம். தமிழகத்தில் கொரோனாவினால் இதுவரை 145 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு 24 மணி நேரத்தில் இறந்துள்ளனர். இத்தகைய இறப்புகளால் சுகாதாரத்துறையே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது.
கொரோனாவினால் தேசிய அளவில் 3 சதவிகித இறப்பு நிகழும் நிலையில், தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.7 சதவிகிதம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி மகிழ்ச்சி அடைவது மிகுந்த வேதனையை தருகிறது. ஆனால், மேலும் பலர் இறக்க வாய்ப்பு இருப்பதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கவலைப்படுவதாக தெரியவில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறி வருவது மிகுந்த வியப்பை தருகிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், வரும் ஜுன் மாத இறுதியில் சென்னையில் மட்டும் கொரோனா தொற்று 2 லட்சத்தை தாண்டும் என்றும், 1,400 பேர் உயிரிழக்கக் கூடும் என்றும் தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்து ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட சுகாதாரத்துறை தயாராக இல்லை.


இந்தியாவிலேயே தொற்று நோயால் பாதிக்கப்பட்ட முதன்மை மாநிலமாக இருக்கிற மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் இருந்து வருகிறது. எண்ணிக்கை கூடுவதைப் பற்றி கவலைப்படாத சுகாதாரத்துறை அமைச்சர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது என அடிக்கடி கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. இத்தகைய செயல்களின் மூலமாக வேகமாக பரவி வரும் கொரோனாவை தமிழக அரசால் எதிர்கொள்ள முடியுமா என்கிற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சம், பதற்றத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய அவலநிலையில் இருப்பதை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.” என அறிக்கையில் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
