justice arumugasamy started his enquiry from today

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று போயஸ்கார்டனில் இருந்து விசாரணையை துவக்குகிறார். முதலில் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் 75 நாள் சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அதிமுக தொண்டர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி அரசுக்கு 3 மாதத்தில் அறிக்கை அளிப்பார் என்று கடந்த மாதம் 25ம் தேதி உத்தரவிட்டார்.

முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து விசாரணை கமிஷன் நீதிபதி ஆறுமுகசாமி, சென்னை, எழிலகத்தில் உள்ள கலசமஹாலில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் அவர் கடந்த 27ம் தேதி தனது விசாரணையை தொடங்கினார்.அப்போது அவர், “ஜெயலலிதா மரணம் தொடர்பாக தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிந்தவர்களும், நேரடி தொடர்பு உடையவர்களும் அது குறித்து அவர்களுக்கு தெரிந்த தகவல்களை தகுந்த ஆவணங்களுடன் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கலாம். விசாரணை ஆணையத்திடம் நவம்பர் 22ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னதாக நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்” என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி இன்று முதல் விசாரணை தொடங்குகிறார். அவர் விசாரணை குழுவுடன் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திற்கு செல்கிறார். அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் என்ன நடந்தது என்பது குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்துகிறார். 



மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடமும் விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவருடன் யார், யார் சென்றனர், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் அனுமதி அளித்தார்களா? ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக யார், யார் எல்லாம் சென்றார்கள் என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.