"மெரீனா இல்லைனாலும் போராடுவேன்" - எடப்பாடி பல்ஸை எகிற வைத்த ஜூலி!
இந்தக் கட்சியும் அதன் ஆட்சியும் வேண்டாம் என்று மக்களே சொல்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து விலகுவார்களா? என்று ஆளும் கட்சியை தெறிக்க விட்டுள்ளார் ஜல்லிக்கட்டு ஜூலி.
மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி, வீரத்தமிழச்சியாக அவதாரமெடுத்தார். பிறகு தனக்கு கிடைத்த புகழை வைத்துக்கொண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு எந்தவித முன்னறிவுப்புமின்றி பேருந்து கட்டணத்தை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு மடங்காகத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்குத் தமிழகம் முழுவதும் அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இரண்டு நாள்களாக மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், பேருந்து கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். இதில், "பேருந்துகள் மக்களின் சொத்து. கட்டண உயர்வை மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்கிறது ஆளும் அரசு. மக்கள் தேர்ந்தெடுத்த கட்சியின் அரசுதான் இது. இந்தக் கட்சியும் அதன் ஆட்சியும் வேண்டாம் என்று மக்களே சொல்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து விலகுவார்களா?" என்று ஜூலி கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார். ஜூலியின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரின் துணிச்சலை பாராட்டியும், சிலர் வழக்கம் அவரை கலாய்த்தும் ட்வீட் தட்டி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தன்னம்பிக்கையும், தைரியமும், போராட்டக் குணமும் மிக்க பெண் என்பதை அப்போது எல்லோருக்கும் உணர்த்திய ஜூலி. ஒருவேளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்திருந்தால், வீரத்தமிழச்சி ஜூலி என்ற பெயரும், போராட்டக்குணம் படைத்த பெண் வீரப்பெண்மணி என்ற பெயர் மட்டுமே நிலைத்திருந்திருக்கும்.
அதுவே அரசியலுக்கு வர முழு தகுதியாக பார்க்கப்பட்டிருக்கும். பாவம் யார் கண் பட்டதோ, யார் செய்த சூழ்ச்சியோ இப்படி ஒரு தமிழ் பெண்ணாக இருந்தும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போராடியதைப் போல, போராட்ட களத்தில் குதிக்க முடியாமல், நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ள ஜூலி சினிமா நட்சத்திரங்களைப் போலவே டிவிட்டரில் அரசியல் செய்யும் சூழல் உருவாகியுள்ளது.